Thursday, 8 April 2010

தமிழ்த்தாய் வாழ்த்து

1. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
   வாழிய வாழியவே

2. வானம் அளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழியவே

3. ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
   இசைகொண்டு வாழியவே

4. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
    என்றென்றும் வாழியவே

5. சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
   துலங்குக வையகமே

6. தொல்லை வினைதரு தொல்லை அகன்று
   சுடர்க மலைநாடே

7. வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
    வாழ்க தமிழ்மொழியே

8. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழியவே











-மாகவி சுப்பிரமணிய பாரதியார் - 







பாடல் விளக்கம்:
1. தமிழ்மொழி காலமெல்லாம் நிலைபெற்று வாழ்க. 

2.எல்லையில்லாது விரிந்துகிடக்கும் வான்வெளியில் இருக்கும்   அனைத்தையும் அளந்து அறியவைக்கும் வளமிக்க தமிழ்மொழி வாழ்க. 

3. ஏழு கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த உலகம் எங்கிலும் எல்லாரும் மனம் விரும்பி மகிழ்ந்து பாராட்டும் பழியில்லாத புகழ்படைத்த தமிழ்மொழி வாழ்க.

 4. தமிழர்களாகிய எங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக வந்துகொண்டுள்ள தமிழ்மொழி எந்தக் காலத்தின் புதுமைக்கும் புதுமையாக நிலைத்து வாழ்க.

 5. உலகத்துக்கும் உலகமக்களுக்கும் ஏற்பட்டுள்ள துன்பம்தரும் நிலைமைகள் யாவும் நீங்குவதற்குத் தமிழ் அறிவும் ஆற்றலும் உறவும் உயர்ந்து விளங்குக. 

6. மக்களின் நன்முயற்சிகளுக்கும் நல்லுறவுக்கும் நல்வாழ்வுக்கும் இடைஞ்சல் செய்யும் இடையூறுகள் எல்லாம் நீங்கி இந்த மலேசியத் திருநாடு வாழ்க.

 7. தன்னை நாடிவந்த அனைவரையும் சீரும் சிறப்புமாக வாழவைக்கும் உள்ளாற்றல் நிறைந்து விளங்குகின்ற தமிழ்மொழி வாழ்க.

 8. எல்லையில்லாததாய் விரிவடைந்துகொண்டுள்ள வான்பரப்பில் ஆவது அனைத்தையும் மக்கள் அனைவருமே அறிந்து புதிய புதிய வளர்ச்சிகள் பெறுவதற்கு வழிகாட்டும் தமிழ்மொழி வாழ்க.


No comments: