Wednesday, 7 April 2010

தமிழ்த்தாய் வாழ்த்து

அன்னை மொழியே
      அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
      முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
      கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
      மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
      திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
      எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
     மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
     முடிதாழ வாழ்த்துவமே!
சிந்தா மணிச்சுடரே!
       செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
       தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
      சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
      மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
     சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
     சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
      நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
      வாழ்த்தி வணங்குவமே


          








- பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

No comments: